Monday 7 October 2013

நவராத்ரி பதிவுகள், நான்காம் நாள், பாரதி, பாம்பே ஜெயஸ்ரீ

இன்று நவராத்ரி  நான்காவது நாள். (8 அக்டோபர் 2013) பாம்பே ஜெயஸ்ரீயின் இன்னொரு பாரதியார் பாடல் கேட்போம்.

இந்தப் பதிவை படித்ததும், பாட்டைக்கேட்டதும், இரண்டு வரியில் பின்னூட்டமிட்டால், மாய்ந்து மாய்ந்து பதிவெழுதும் எனக்கு, நாலு பேர் படிக்கிறார்கள், கேட்கிறார்கள், அதனால், இந்த முயற்சி வீணில்லை என்று தோணும்.

இது பாரதியார் அவரது மனைவி செல்லம்மாளுடன். அந்த நாளில் வண்ணப்படம் ஏது என்று கேட்கக் கூடாது. கறுப்பு, வெள்ளைப் படத்தை திருத்தியிருக்கிறார்கள்.  நன்றாகத்தான் இருக்கிறது. ரசிப்போமே!




சரி பாடலை முதலில் கேளுங்கள்.



கண்ணம்மா-என் காதலி

காட்சி வியப்பு

செஞ்சுருட்டி-ஏகதாளம்

 ரசங்கள்:சிருங்காரம்,அற்புதம்

சுட்டும் விழிச்சுடர் தான்,-கண்ணம்மா! சூரிய சந்திரரோ?
வட்டக் கரிய விழி,-கண்ணம்மா! வானக் கருமை கொல்லோ?
பட்டுக் கருநீலப்-புடவை பதித்த நல் வயிரம்
நட்ட நடு நிசியில்-தெரியும் நக்ஷத்திரங்க ளடி!

சோலை மல ரொளியோ-உனது சுந்தரப் புன்னகை தான்?
நீலக் கட லலையே-உனது நெஞ்சிலலைக ளடி!
கோலக் குயி லோசை-உனது குரலினிமை யடீ!
வாலைக் குமரி யடீ,-கண்ணம்மா! மருவக் காதல் கொண்டேன்.

சாத்திரம் பேசுகிறாய்,-கண்ணம்மா! சாத்திரமேதுக் கடீ!
ஆத்திரங் கொண்டவர்க்கே,-கண்ணம்மா! சாத்திரமுண்டோ டீ!
மூத்தவர் சம்மதியில்-வதுவை முறைகள் பின்பு செய்வோம்;
காத்திருப்பேனோ டீ?-இது பார் கன்னத்து முத்த மொன்று!

எனது கற்பனைகள்.

புதிது புதிதாய் உவமைகள் காட்டிப் பாடுவதில் பாரதிக்கு நிகர் அவர்தான். கண்ணம்மாவின் பட்டுப்புடவை, அதில் ஜொலிக்கும் வைரம்,  நடுராத்திரியின் வானம் போல இருக்கிறதாம். அந்த வைரங்கள், நக்ஷத்திரங்களாம். இரண்டு கண்களும், சூரிய, சந்திரர்கள். கருத்த கண்கள், வானத்துக் கருமை. இப்படி அடுக்கிக் கொண்டே போகிறார்.


இனி ஜெயஸ்ரீ!

இந்தப்பாடலிலும், சிவப்பு நிறத்தில் உள்ள சரணத்தை ஜெயஸ்ரீ பாடவில்லை. பாடியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். சுருக்கமாக முடித்துவிட்டார்.

இந்த புகைப்படம் பாம்பே ஜெயஸ்ரீ ஆஸ்கார் விழாவிற்குச் சென்றபோது எடுத்தது.



வழக்கம்போல இந்தப் பாட்டிலும், இவரது தனித்துவம் தெரிகிறது. கேளுங்கள். ரசியுங்கள். நானும் அவரது பாடலைத் தினமும் பதிவேற்றுவதற்காக கேட்டுக்கொண்டிருக்கிறேன். ஒன்பது நாளுக்கும் பாட்டு கிடைக்குமா என்று கவலைப்பட்டது போய், எந்த பாடலைத் தேர்ந்தெடுப்பது என்கிற கவலை வந்துவிட்டது.

மறக்காமல், ஒரு வரி, பின்னூட்டமிட்டுச் செல்லுங்கள்.

அன்புடன் வெங்கட்
8 அக்டோபர் 2013

No comments: