Monday 7 October 2013

நவராத்ரி, பாரதியார், பாம்பே ஜெயஸ்ரீ (3வது நாள்)

இன்று நவராத்ரி மூன்றாவது நாள். (7 அக்டோபர் 2013) பாம்பே ஜெயஸ்ரீயின் இன்னொரு பாரதியார் பாடல் கேட்போம்.

இந்தப் பதிவை படித்ததும், பாட்டைக்கேட்டதும், இரண்டு வரியில் பின்னூட்டமிட்டால், மாய்ந்து மாய்ந்து பதிவெழுதும் எனக்கு, நாலு பேர் படிக்கிறார்கள், கேட்கிறார்கள், அதனால், இந்த முயற்சி வீணில்லை என்று தோணும்.



முதல் இரண்டு நாளும், ச்ருங்கார ரசத்தில் அமைந்த பாட்டுகள் கேட்டோம். இன்று கண்ணம்மாவைக் குழந்தையாக, தாலாட்டும் பாட்டுக் கேட்கலாம்.என்னைக்  கலி தீர்த்தே  உலகில்   ஏற்றம் புரிய வந்தாய்”, பிள்ளைச் செல்வத்தின் பெருமையை எவ்வளவு அழகாகச் சொல்லியிருக்கிறார். என்னுடைய பெண், சிறு பிள்ளையாக இருந்தபோது இந்தப்பாட்டைக் கேட்கும் போது, எனக்காகவே பாரதி எழுதினாற்போல் தோணும். பாடத்தெரியவில்லையே என்று குறைப்பட்டுக்கொண்டது அப்போதுதான்.

இன்னொரு அற்புதமான வரி,
மெச்சி யுனை யூரார்  புகழ்ந்தால்   மேனி சிலிர்க்கு தடீ!

உண்மைதானே! நம் குழந்தைகளை பிறர் பாராட்டும் போது, நமக்கு ஏற்படுகிற புளங்காகிதம். அனுபவித்தவர்களுக்குப் புரியும்.

சரி பாடலை முதலில் கேளுங்கள்.



கண்ணம்மா - என் குழந்தை

சின்னஞ் சிறு கிளியே  கண்ணம்மா!        செல்வக் களஞ்சியமே!
என்னைக்  கலி தீர்த்தே  உலகில்   ஏற்றம் புரிய வந்தாய்!        1

பிள்ளைக் கனியமுதே  கண்ணம்மா        பேசும் பொற் சித்திரமே!
அள்ளி யணைத்திடவே   என் முன்னே        ஆடி வருந்தேனே!        2

ஓடி வருகையில்  கண்ணம்மா    உள்ளங் குளிரு தடீ!
ஆடித்திரிதல் கண்டால்   உன்னைப்போய்  ஆவி தழுவு தடீ!        3

உச்சி தனை முகந்தால்  கருவம்  ஓங்கி வளரு தடீ!
மெச்சி யுனை யூரார்  புகழ்ந்தால்   மேனி சிலிர்க்கு தடீ!        4

கன்னத்தில் முத்தமிட்டால்  உள்ளந்தான்     கள்வெறி  கொள்ளு தடீ!
உன்னைத் தழுவிடிலோ  கண்ணம்மா     உன்மத்தமாகு தடீ!        5

சற்றுன் முகஞ் சிவந்தால்  மனது சஞ்சல மாகு தடீ!
நெற்றி சுருங்கக் கண்டால்  எனக்கு  நெஞ்சம் பதைக்கு தடீ!        6

உன்கண்ணில் நீர் வழிந்தால்என்நெஞ்சில்  உதிரங் கொட்டு தடீ!
என் கண்ணிற் பாவையன்றோ? கண்ணம்மா!    என்னுயிர்  நின்ன தன்றோ?    7  
 சொல்லு மழலையிலே - கண்ணம்மா!        துன்பங்கள் தீர்த்திடு வாய்;
முல்லைச் சிரிப்பாலேஎனது        மூர்க்கந் தவிர்த்திடு வாய்.        8

இன்பக் கதைக ளெல்லாம்  உன்னைப்போல்     ஏடுகள் சொல்வ துண்டோ?
அன்பு தருவதிலேஉனைநேர்        ஆகுமோர் தெய்வ முண்டோ?        9

மார்பில் அணிவதற்கே  உன்னைப்போல்   வைர மணிக ளுண்டோ?
சீர்பெற்று வாழ்வதற்கே   உன்னைப் போல்  செல்வம் பிறிது முண்டோ?        10

இனி ஜெயஸ்ரீ (புராணம்!)

இந்தப்பாடலிலும், சிவப்பு நிறத்தில் உள்ள சரணங்களை ஜெயஸ்ரீ பாடவில்லை. பாடியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

என்ன இனிமையான குரல். உங்களுக்கு சிறு குழந்தையிருந்தால், இந்தப் பாட்டைக்கேட்டவாறு தூங்கச் செய்யுங்கள். இரண்டு தடவை கேட்டால் நீங்களே தூங்கிவிடுவீர்கள். கடைசியில் கண்ணம்மா, என்னுயிர் நின்னதன்றோ என்று ஜெயஸ்ரீ முடிக்கும் போது, நீங்கள் மறுபேச்சு பேசாமல், ஒத்துக்கொள்வீர்கள் என்பது நிச்சயம்.






அன்புடன் வெங்கட்
7 அக்டோபர் 2013

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

என்னவொரு இனிமை... நன்றிகள்...

ரசனைக்கு வாழ்த்துக்கள்...

Maasianna said...

simply super.i am also like very much of bombay jayashri