Monday 7 October 2013

ஐந்தாம் நாள் நவராத்ரி (தொடரும் கண்ணம்மா பாட்டு, ஜெயஸ்ரீயின் குரலில்)

பதிவுலக நண்பர்களே,

நவராத்ரியின் ஐந்தாம் நாள். என்ன, போன நாலு நாளும் பாரதியார் பாட்டு கேட்டீர்களா? ஒன்பது நாளும் உங்களை நான் விடுவதாயில்லை. இந்த தொடருக்காக நான் நெட்டில், பாரதியின் பாடல்வரிகளைத்தேடி அலைந்தபோது, நிறைய திரைப்படங்களில், பாரதியார் பாட்டு ஆதிகாலம் தொட்டே வந்திருப்பது தெரிந்தது. என்ன இருந்தாலும், நம்ம ஜெயஸ்ரீ பாடுகிற மாதிரி வருமா. கர்னாடக வித்வான்களும், நிறைய பாரதியார் பாட்டுக்களை பாடிக் குவித்திருக்கிறார்கள்.

மரபுக்கவிதையிலேயே, அழகான வர்ணனைகளோடு, மிக எளிய தமிழில் பாடல்களைத்தந்து, பாரதி ஒரு மிகப் பெரிய இலக்கிய புரட்சி செய்திருக்கிறார். முப்பதுகளைக்கூட முழுசாக கடக்காத இந்த ‘பாட்டு ராஜா’ தொடாத பொருள்ளில்லை. தேச பக்தி, தெய்வ பக்தி, காதல் கவிதைகள், புராண பின்னணியில் பாஞ்சாலி சபதம், வசன கவிதை, இளைய பாரதம், குழந்தை பாட்டு.. எழுதிக் கொண்டே போகலாம்.

இன்றைய பாடல் கண்ணம்மா பாட்டுதான். பாரதியார், கடற்கரையோரம் (திருவல்லிக்கேணி, பாண்டிச்சேரி) உட்கார்ந்து பகற்கனவு கண்டு கொண்டிருக்கிறார், அவரே சொல்கிறார். “சாலப் பலபல நற் பகற் கனவில் தன்னை மறந்த லயந்தன்னில் இருந்தேன்”. அப்போது கூட கவிஞருக்கு அனிச்சையாக கவிதை வருகிறது. ”மூலைக் கடலினை யவ் வான வளையம்
முத்தமிட்டே தழுவி முகிழ்த்தல் கண்டேன்”

கண்ணம்மா பின்னால் வந்து, பாரதியின் கண்களைப்பொத்த (மறைக்க), அவளது கை ஸ்பர்ஸமும், பட்டுடை வீசுகமழ் வாசமும் அவள் கண்ணம்மா என்று காட்டிக்கொடுக்க, ”வாங்கி விடடிகையை யேடி கண்ணம்மா!
மாய மெவரிடத்தில்?” என்று கேட்டு பார்தியார் அவளைப்பார்த்து (What's up??) என்ன செய்தி என்று கேட்கிறார். அந்த சுவாரஸ்யமான உரையாடலை  நீங்களே படியுங்கள்.

பின்னே வந்து நின்று கண் மறைத்தல்

நாதநாமக்கிரியை-ஆதிதாளம்

சிருங்கார ரசம்


மாலைப் பொழுதிலொரு மேடை மிசையே
வானையும் கடலையும் நோக்கி யிருந்தேன்;
மூலைக் கடலினை யவ் வான வளையம்
முத்தமிட்டே தழுவி முகிழ்த்தல் கண்டேன்;
நீல நெருக்கிடையில் நெஞ்சு செலுத்தி,
நேரங் கழிவதிலும் நினைப்பின்றியே
சாலப் பலபல நற் பகற் கனவில்
தன்னை மறந்த லயந்தன்னில் இருந்தேன்.

ஆங்கப் பொழுதிலென் பின்புறத்திலே,
ஆள்வந்து நின்றெனது கண் மறைக்கவே,
பாங்கினிற் கையிரண்டுந் தீண்டி யறிந்தேன்,
பட்டுடை வீசுகமழ் தன்னி லறிந்தேன்;
ஓங்கி வருமுவகை யூற்றி லறிந்தேன்;
ஒட்டு மிரண்டுளத்தின் தட்டி லறிந்தேன்;
வாங்கி விடடிகையை யேடி கண்ணம்மா!
மாய மெவரிடத்தில்?’என்று மொழிந்தேன்.

சிரித்த ஒலியிலவள் கைவி லக்கியே.
திருமித் தழுவிஎன்ன செய்தி சொல்என்றேன்;
நெரித்த திரைக்கடலில் என்ன கண்டிட்டாய்?
நீல விசும்பினிடை என்ன கண்டிட்டாய்?
திரித்த நுரையினிடை என்ன கண்டிட்டாய்?
சின்னக் குமிழிகளில் என்ன கண்டிட்டாய்?
பிரித்துப் பிரித்துநிதம் மேகம் அளந்தே.
பெற்ற நலங்கள் என்ன?பேசுதிஎன்றாள்.

நெரித்த திரைக்கடலில் நின்முகங் கண்டேன்;
நீல விசும்பினிடை நின்முகங் கண்டேன்;
திரித்த நுரையினிடை நின்முகங் கண்டேன்;
சின்னக் குமிழிகளில் நின்முகங் கண்டேன்;
பிரித்துப் பிரிந்துநிதம் மேகம் அளந்தே,
பெற்றதுன் முகமன்றிப் பிறிதொன் றில்லை;
சிரித்த ஒலியினில்ன் கைவி லக்கியே,
திருமித் தழுவியதில் நின்முகங் கண்டேன்.”

இப்போது பாடலைக் கேட்போம்.




பாரதியாரின் குடும்பப் படம்

ஜெயஸ்ரீ, முதலிரண்டு சரணங்கள்தான் பாடியிருக்கிறார். முழுப்பாட்டும் அவர் குரலில் கேட்க ஆவலாக இருக்கிறது. கச்சேரிகளில், துக்கடா பாடுவதற்காக பாதிப்பாட்டை விட்டுவிடுகிறார்கள். குழந்தைகள், தின்பண்டம் உண்ணும்போது, அம்மா வந்து உடம்புக்கு ஆகாது என்று பாதியில் பிடுங்கிக் கொள்வது போல இருக்கிறது. பாதியாவது சாப்பிட்ட திருப்தி, முழுவதும் சாப்பிட முடியாத வருத்தம் இரண்டும் கலந்த ஒரு உணர்வு. நாமெல்லாரும் கடந்துவந்த ஒரு நிலைதான். ஜெயஸ்ரீயின் பாதிப்பாட்டை கேட்கும் போது நானும் அந்த மன நிலையில்தான் இருக்கிறேன்.


எனக்குப்பிடித்த படங்களில் இதுவும் ஒன்று. கறுப்பு வெள்ளையானாலும், அழகான புகைப்படம். மந்தகாச புன்னகை, அவரது பாட்டைக்கேட்கும் போது கிடைக்கிற மன அமைதி, இந்தப் புன்னகையிலும் கிடைக்கிறது.

கை வலிக்க நான் எழுதியாகி விட்டது. இனி உங்கள் முறை. ஒரு எஸ்.எம்.எஸ் அல்லது ட்வீட் போல நறுக்கென்று நாலுவரி எழுதிவிட்டுப்போங்கள்.

மீண்டும் நாளை சந்திப்போம்.

அன்புடன் வெங்கட்



1 comment:

Sethu Subramanian said...

The ID legend given in the picture should read "right to left" and not "left to right". Look at the picture again. Whoever wrote the legend below the picture goofed.