Sunday 13 October 2013

சரஸ்வதி பூஜை; நவராத்ரி நிறைவு நாள் (ஒன்பதாம் நாள்). பாரதி பாடல்கள், ஜெயஸ்ரீ குரலில்


பதிவுலக, முக நூல் நண்பர்களுக்கு வணக்கம். இன்று சரஸ்வதி பூஜை. ஒன்பது நாட்களாக, பாரதியின் பாடல்களை, பாம்பே ஜெயஸ்ரீயின் குரலில் கேட்டுக்கொண்டிருக்கிறோம். இன்றைக்கு வேண்டிய பாடலைத் தேர்ந்தெடுப்பதில் சிரமமொன்றுமிருக்கவில்லை. நீங்களும் ஊகித்திருப்பீர்கள்.

வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்,
வீணை செய்யும் ஒலியில் இருப்பாள்;
கொள்ளை யின்பம் குலவு கவிதை
கூறு பாவலர்  உள்ளத் திருப்பாள்;
உள்ள தாம்பொருள் தேடி யுணர்ந்தே
ஓதும் வேதத்தின்  உள்நின்றொளிர்வாள்;
கள்ள மற்ற முனிவர்கள் கூறும்
கருணை வாசகத்துட்பொருளாவாள்.                                    (வெள்ளைத்)

மாதர் தீங்குரல் பாட்டில் இருப்பாள்,
மக்கள் பேசும் மழலையில் உள்ளாள்;
கீதம் பாடும் குயிலின் குரலைக்
கிளியின் நாவை இருப்பிடங் கொண்டாள்;
கோதகன்ற தொழிலுடைத்தாகிக்
குலவு சித்திரம் கோபுரம் கோயில்
ஈதனைத்தின் எழிலிடை யுற்றாள்
இன்ப மே வடி வாகிடப் பெற்றாள்.                                               (வெள்ளைத்)

இந்தப் பாடல் மிக நீளமானது. ஜெயஸ்ரீ முதலிரண்டு சரணங்கள் தான் பாடியிருக்கிறார். அதனால், நீளம் கருதி நானும் மற்ற சரணங்களை விட்டுவிட்டேன்.

சரஸ்வதி வாழுமிடங்களாக பலவற்றைக் குறிப்பிடுகிறார். வெள்ளைத்தாமரை, வீணையின் ஒலி, பாவலரின் நெஞ்சம், வேதத்தின் உட்பொருள், கள்ளமற்ற முனிவரின் கருணை வாசகம் என்று அவரது கற்பனை விரிகிறது.

ஒன்று கவனித்தீர்களா! கலைமகள், சங்கீதத்தில் இருப்பாள் என்று சொல்லவில்லை. மாதர் தீங்குரல் பாட்டில் இருப்பாள் என்கிறார், குறிப்பாகப் பாடுகிறார். அந்த மாதர் வேறு யாருமில்லை. நம் ஜெயஸ்ரீதான்.



ஒன்பது நாளும், பொறுமையாக என் பதிவுகளைப் படித்து ஊக்கமளித்த நண்பர்களுக்கு நன்றி. கர்னாடக சங்கீதத்தை எளிமையான முறையில் அறிமுகம் செய்யச்சொன்ன நண்பருக்கு ப்ரத்யேக நன்றி. பள்ளி நாட்களில் ரசித்த பாரதியின் பாடல்களை மீண்டுமொரு முறை படிக்கவும், தட்டச்சவும், இந்த சாக்கில் ஜெயஸ்ரீயின் பாட்டை மீண்டும் பல தடவை கேட்கவும் வாய்ப்புக் கிட்டியது.

மறக்க முடியாத நவராத்ரி. எனக்கே எப்போதாவது இந்தப் பாட்டைக் கேட்கவேண்டுமானால், எளிதாக ஒரே இடத்தில் கேட்டுவிடலாம்.

விடை பெறுவதற்குமுன்,

நாளை விஜயதசமி, அதற்கு பொருத்தமான ஒரு பாடலோடு இந்த தொடரை முடிக்கலாமென்று எண்ணம். அந்த பாட்டின் வரிகள் உங்களுக்கு மிகவும் பிடிக்கும். நாளை சந்திப்போம்.

அன்புடன் வெங்கட்
13 அக்டோபர் 2013

1 comment:

Yaathoramani.blogspot.com said...

கேட்டு மனம் மிக மகிழ்ந்தோம்
பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி
இனிய நவராத்திரி தின நல்வாழ்த்துக்கள்