Thursday 10 October 2013

நவராத்ரி பதிவுகள்; எட்டாம் நாள்; பாரதி, பாம்பே ஜெயஸ்ரீ

வணக்கம் நண்பர்களே,

நவராத்ரியில் பாரதியின் பாடல்கள், பாம்பே ஜெயஸ்ரீயின் குரலில் தொடர்கிறது. இன்று கண்ணன் பாட்டு. கோபி, கண்ணனைக்கண்டு வர தோழியைத் தூது விடுகிறாள். கண்ணன் என்ன மன நிலையில் இருக்கிறான் என்று தெரிந்துவரச் சொல்கிறாள். இந்தப் பாடலில் ச்ருங்கார ரசத்துடன், ரௌத்ர ரசமும் இருக்கிறது.

பாடலின் ஆரம்பத்தில், கண்ணனின் எண்ணம்தான் என்னவென்று தெரிந்து கொண்டுவிட்டால், தோழிக்கு எது வேண்டுமானாலும் செய்வேனென்று சொல்கிறாள். ஆனால், சிறிது நேரத்தில், கோபம் வந்து, கண்ணன் ஆற்றங்கரையில் தனியிடத்தில் பேசியதையெல்லாம், தூற்றி முரசு சாற்றுவேனென்று சொல்லச் சொல்கிறாள். அப்பப்பா என்ன கோபம்! அடுத்த சரணத்திலும் (ஜெயஸ்ரீ இந்த சரணம் பாடவில்லை), இடைச்சிப் பெண்களிடம் காட்டுகிற சூழ்ச்சித்திறமை எல்லாம், வீர குல மாதரிடத்தில் வேண்டியதில்லையென்று சொல்லச் சொல்கிறாள்.

கோபம் தணிந்து, கடைசியில் கண்ணனையே எண்ணி மனம் மறுகிறது, அதனால் ஒரு சொல் கேட்டுவா என்று முத்தாய்ப்பு வைக்கிறாள்.

ஒரு பெண்ணின் மன நிலையை மிக அழகாக படம் பிடித்துக்காட்டும் பாட்டு. முதலில் பாட்டைப் படியுங்கள்.


கண்ணன்-என் காதலன்

பாங்கியைத் தூது விடுத்தல்

கண்ணன் மனநிலையைத் தங்கமே தங்கம்-அடி
கண்டுவர வேணுமடி தங்கமே தங்கம் (கண்ணன்)

எண்ணமுரைத்துவிடில் தங்கமே தங்கம்-பின்னர்
ஏதெனிலுஞ் செய்வமடி தங்கமே தங்கம். (எண்ணம்)

கன்னிகை யாயிருந்து தங்கமே தங்கம்-நாங்கள்
காலங் கழிப்பமடி தங்கமே தங்கம்; (கன்னிகை)

அன்னிய மன்னர் மக்கள் பூமியிலுண்டாம்-என்னும்
அதனையுஞ் சொல்லிடடி தங்கமே தங்கம் (கண்ணன்)

சொன்ன மொழிதவறும் மன்னவ னுக்கே-எங்கும்
தோழமை யில்லையடி தங்கமே தங்கம்;
என்ன பிழைகளிங்கு கண்டிருக்கிறான்?-அவை
யாவும் தெளிவுபெறக் கேட்டு விடடீ

மையல் கொடுத்துவிட்டுத் தங்கமே தங்கம்-தலை
மறைந்து திரிபவர்க்கு மானமு முண்டோ?
பொய்யை யுருவமெனக் கொண்டவ னென்றே-கிழப்
பொன்னி யுரைத்ததுண்டு தங்கமே தங்கம்.

ஆற்றங் கரையதனில் முன்ன மொருநாள்-எனை
அழைத்துத் தனியிடத்தில் பேசிய தெல்லாம்

தூற்றி நகர் முரசு சாற்றுவ னென்றே
சொல்லி  வருவையடி  தங்கமே தங்கம். (கண்ணன்)

சோர மிழைத்திடையர் பெண்களுடனே-அவன்
சூழ்ச்சித் திறமை காட்டுவ தெல்லாம்
வீர மறக்குலத்து மாதரிடத்தே
வேண்டிய தில்லையென்று சொல்லி விடடீ!

பெண்ணென்று பூமிதனில் பிறந்துவிட்டால்-மிகப் 
பீழை யிருக்குதடி தங்கமே தங்கம்;
பண்ணொன்று வேய்ங்குழலில் ஊதிவந்திட்டான்-அதைப்
பற்றி மறக்குதில்லை பஞ்சை யுள்ளமே

நேர முழுதிலும் அப்பாவி தன்னையே-உள்ளம்
நினைத்து  மறுகுதடி தங்கமே தங்கம்
தீர ஒருசொல் இன்று கேட்டு வந்திட்டால்-பின்பு
தெய்வ மிருக்குதடி தங்கமே தங்கம். (கண்ணன்)




வழக்கம் போல ஜெயஸ்ரீ அசத்துகிறார். ஆனாலும் கண்ணன் மீது கோபமாய்ச் சொல்லும் சரணங்களில் கோப ரசம் தனியாகத் தெரியவில்லை. ஏக்க பாவனைதான் தொனிக்கிறது. ஜெயஸ்ரீயின் பா4வம் அப்படி. எத்தனை தடவை கேட்டாலும் அலுக்காத பாட்டு. பொருள் பொதிந்த பாடல் வரிகளும், கவிஞனின் மன நிலையை சங்கீத்தில் கொண்டு வரும் திறன் படைத்த பாடகியும் சேர்ந்துவிட்டால், ரசிகனின் ஆனந்ததிற்கு எல்லையுண்டோ!


நாளை சரஸ்வதி பூஜை. இன்னொரு பொருத்தமான பாட்டுடன் சந்திக்கிறேன்.

அன்புடன் வெங்கட்
12 அக்டோபர் 2013



1 comment:

Yaathoramani.blogspot.com said...

நாங்களும் பாட்டினில் கரைந்தோம்
பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி